புது தில்லி: "மக்களவைத் தேர்தலில் மக்கள் என்ன முடிவு அளிப்பார்கள் என்பதை நான் முன்னதாகவே கணித்துக் கூற விரும்பவில்லை. தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும். அவர்கள் யாரைத் தேர்வு செய்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களை வெள்ளிக்கிழமை சந்தித்த அவரிடம், தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளில் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகளின் வியூகம் என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அன்றைய தினம் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளுக்கு காங்கிரஸ் சார்பில் ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கணிக்க விரும்பவில்லை: எனினும், இந்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்த ராகுல் காந்தி, "மோடியைப் போல அல்லாமல் எங்கள் கட்சியில் அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களான சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் உள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்த கேள்விகளுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை.
மேலும், தேர்தலில் மக்கள் என்ன முடிவு அளிப்பார்கள் என்பதை நான் முன்னதாகவே கணித்துக் கூறவும் விரும்பவில்லை; தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்.
அவர்கள் யாரைத் தேர்வு செய்துள்ளார்கள் என்பது தேர்தல் முடிவு வெளியாகும் மே 23-ஆம் தேதி துல்லியமாகத் தெரிந்துவிடும்' என்றார்.
மோடி மீண்டும் பிரதமராக முடியாது: மோடி மீண்டும் பிரதமராக முடியாது என்பதை உறுதிபடத் தெரிவித்த ராகுல், "பிரதமர் மோடி தனது தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான வாய்ப்புகளில் 90 சதவீதத்தை காங்கிரஸ் கட்சி முறியடித்துவிட்டது.
தேர்தல் பிரசாரத்தில் எதிர்க்கட்சிகள் மீது தொடர்ந்து அவதூறு பேசியதன் மூலம் மீதமுள்ள 10 சதவீத வாய்ப்புகளை மோடியே முறியடித்துவிட்டார்.
விவாதத்துக்கு வரவில்லை: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நான் விடுத்த அழைப்பை மோடி ஏற்கவில்லை. 5 ஆண்டுகாலம் பிரதமராக இருந்த அவர், இதுவரை ஒருமுறை கூட செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தியது இல்லை.
ஆனால், தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு, திடீரென பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார். அதிலும் கூட செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முறையாக பதிலளிப்பதை அவர் தவிர்த்துவிட்டார்.
பிரதமர் மோடியும், பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவும் என்னதான் தத்துவங்களைப் பேசினாலும், அவை காந்தியின் தத்துவமாகிவிடாது.
இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் முறையாக இல்லை என்பதுதான் எனது கருத்து.
பிரதமர் மோடியின் தேர்தல் பிரசார அட்டவணையின் அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் மேற்கு வங்கத்தில் முன்னதாக பிரசாரத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவை எடுத்தது.
ஒரு மாநிலத்தில் பிரச்னை என்று கூறி தேர்தல் பிரசாரத்தை முன்னதாக முடிக்க நினைத்தால், அதனை உடனடியாக அமல்படுத்தி இருக்க வேண்டும்.
ஆனால், மேற்கு வங்கத்தில் மோடியின் பிரசாரத்துக்கு பிறகுதான் ஒட்டுமொத்த பிரசாரத்தையும் நிறுத்துவோம் என்று தேர்தல் ஆணையம் கூறியதை எவ்வாறு ஏற்க முடியும் என்றார் ராகுல் காந்தி.