லக்னௌ: வாராணசி மக்களவைத் தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு வாக்காளர்களை வெளிநபர்கள் மிரட்டுகின்றனர் என்று பகுஜன்சமாஜ் கட்சியின் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வாக்குகளை விலைக்கு வாங்கும் செயலிலும் அந்த நபர்கள் ஈடுபட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் மாயாவதி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில், "மேற்கு வங்கத்தில் தேர்தல் நிலவரத்தை தீவிரமாக கண்காணிப்பதாக கூறும் தேர்தல் ஆணையம், வாராணசியில் அதுபோன்ற கண்காணிப்பை மேற்கொள்ளாதது ஏன்? வாராணசியில் பிரதமர் மோடியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பதற்காக, வாக்காளர்களை அச்சுறுத்தவும், விலைக்கு வாங்கவும் வெளிநபர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
இதுபோன்ற சூழலில், அங்கு வாக்குப்பதிவு சுதந்திரமாகவும் நேர்மையாகவும் எப்படி நடைபெறும்?' என்று மாயாவதி கேள்வியெழுப்பியுள்ளார்.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் 19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாராணசி உள்பட 13 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.