
கொல்கத்தா/ புது தில்லி: மேற்கு வங்கத்தில் மக்களவை இறுதிக்கட்டத் தேர்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்படி, தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 9 மக்களவைத் தொகுதிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த 6 கட்டத் தேர்தல்களிலும், மேற்கு வங்க மாநிலத்தின் பரவலான பகுதிகளில் வன்முறைச் சம்பவங்கள் அரங்கேறின. இதை கருத்தில் கொண்டு, மேற்கு வங்கத்தில் மக்களவை இறுதிக்கட்ட தேர்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும் நடைபெறுவதை உறுதிப்படுத்தும்படி தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், "இறுதிக்கட்ட தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இந்த தேர்தல் அமைதியாகவும், பாரபட்சமின்றியும், மத்திய அரசு மற்றும் மத்தியில் ஆளும் பாஜகவின் தலையீடு இல்லாமல் நடைபெறுவதை தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறேன். நாட்டின் கூட்டாட்சி அமைப்பையும், ஜனநாயக நிறுவனங்களையும் தேர்தல் ஆணையம் பாதுகாக்க வேண்டும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தேர்தல் ஆணையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், "தேர்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய பாதுகாப்புப் படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவது தொடர்பான நம்பிக்கையை மக்களிடையே மத்திய பாதுகாப்புப் படைகள் ஏற்படுத்தவில்லை. சிஆர்பிஎஃப் படைப்பிரிவின் அணிவகுப்பும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட இடங்களில் நடக்கவில்லை. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும்' எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.