பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து முயற்சிப்பதாக அம்மாநில முதல்வர் அமரீந்தர் சிங், ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
எல்லோரும் தங்களுக்கென்ற இலக்குகளை வைத்திருப்பார்கள். அதேமாதிரி சித்துவும் ஒரு இலக்கு வைத்துள்ளார். அவரை எனக்கு சிறு வயது முதல் அறிமுகம். சித்துவுடன் எனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை.
ஆனால், என்னை விரட்டி விட்டு பஞ்சாப் முதல்வராக வேண்டும் என்று நவ்ஜோத் சிங் சித்து முயற்சித்து வருகிறார். இதை ஒரு பணியாகவே செய்து வருகிறார்.
அதற்காக தேர்தல் நேரத்தில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம். ஏனென்றால் காங்கிரஸ் கட்சிக்கு தான் அது அவப்பெயரை ஏற்படுத்தும்.
இதில் எனக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்பதை சித்து முதலில் உணர வேண்டும். மற்றபடி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாத வகையில் விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தெரிவித்தார்.