இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தலின் இறுதிகட்ட வாக்குப்பதிவு நேற்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது.
இதோடு, தமிழகத்தில் 4 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடைபெற்றது.
இந்த தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போன எத்தனையோ வாக்காளர்களும் இருப்பார்கள். அவர்களுடன், அட போங்கப்பா.. நான் ஓட்டுப் போடவில்லை என்றால் நாடே கவிழ்ந்துவிடுமா என்று சொல்லிவிட்டு வாக்களிக்காமல் இருந்தவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்.
அவர்களைப் போல அல்லாமல் நமது ஜனநாயகக் கடைமையை ஆற்ற வேண்டும் என்ற உணர்வோடு வாக்களித்த சில வாக்காளர்கள் பிறருக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார்கள்.
அவர்களைப் பற்றி பார்க்கலாம்.
சூலூர் பாட்டி.. தமிழகத்தில் சூலூர் பேரவைத் தொகுதிக்கு நேற்று நடைபெற்ற இடைத் தேர்தலில் 103 வயது மூதாட்டி ஒருவர் தள்ளாத வயதிலும், தளராத மனதோடு வந்து வாக்களித்துச் சென்றார்.
மேற்கு வங்கத்தில் நடக்க முடியாத நிலையில் இருக்கும் தனது 80 வயது தாயை, மகன் தோளில் சுமந்து வந்து வாக்களிக்கச் செய்த சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
மத்தியப் பிரதேசத்தில் இரண்டு கைகளையும் இழந்த மாற்றுத்திறனாளி இளைஞர், தான் எப்படி வாக்களிக்க முடியும் என்று நினைத்து வாக்களிக்க வராமல் வீட்டிலேயே இருந்து விடாமல், எப்படியும் ஜனநாயகக் கடமையை ஆற்றியே தீருவது என்று வாக்களிக்க வந்தார்.
அவருக்கு இரண்டு கைகளும் இல்லாததால், காலின் இரண்டாவது விரலில் மை வைத்து, அவர் காலைப் பயன்படுத்திய வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களித்துச் சென்றார்.
எத்தனையோ அரசியல் அராஜகங்களை தாண்டி, இவர்களைப் போன்றவர்களால்தான் இன்னமும் இந்திய ஜனநாயகம் தனது உயிர்துடிப்பை நிறுத்தி விடாமல் இருக்கிறது.