முலாயம் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு: ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிவிப்பு 

முலாயம் சிங் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
முலாயம் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு: ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ அறிவிப்பு 

புது தில்லி: முலாயம் சிங் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ்  மற்றும் அவரது மகன்கள் அகிலேஷ் யாதவ், பிரதீக் யாதவ் ஆகியோருக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கினை சி.பி.ஐ. கடந்த 2007 -ஆம் ஆண்டு பதிவு செய்தது.

இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரும், 2005-ஆம் ஆண்டு முதல்முறையாக இதுகுறித்து வழக்குத் தொடுத்தவருமான விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் முலாயம்சிங் யாதவ் மற்றும் அகிலேஷ் யாதவ் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை எந்த நிலையில் உள்ளது என்பதை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தெரிவிக்க வேண்டும் என கோரப்பட்டு இருந்தது .

இந்த மனுவானது மார்ச் மாதம் 25-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது இரண்டு வாரங்களுக்குள் தனது பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு சி.பி.ஐ.க்கு நோட்டீஸ் அனுப்பபட்டது.

அதன் தொடர்சியாக முலாயம் சிங் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பாத்திரம் ஒன்றை கடந்த மாதம் தாக்கல் செய்தார். அதில் சொத்துக் குவிப்பு வழக்கைப் பொறுத்த வரை தான் ஒரு அப்பாவி என்று தெரிவித்திருந்தார்.

அதனைத்தொடர்ந்து இந்த வழக்கானது தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மற்றும் நீதிபதி தீபக் குப்தா அடங்கிய அமர்வு முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.ஐ.க்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.   

இந்நிலையில் முலாயம் சிங் மற்றும் அகிலேஷுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கில் மேற்கொண்டு விசாரிப்பதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ 23 பக்கங்கள் அடங்கிய அறிக்கையொன்றைத் தாக்கல் செய்தது. அதில் கூறப்பட்டிருந்ததாவது:

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக கடந்த 07.08.2013 அன்று நடத்தப்பட்ட முதல்நிலை விசாரணையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர்கள் இருவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினை வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களெதுவும் இல்லை. எனவே இதன்பின்பு மேற்கொன்டு விசாரணை எதுவும் நடைபெறவில்லை.

இதுதொடர்பான அறிக்கையானது மத்திய ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இவ்வாறு சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com