பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவை லக்னெளவில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது வாக்குக் கணிப்பு முடிவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.
உ.பி.யில் மாயாவதி-அகிலேஷ் அமைத்துள்ள மகா கூட்டணிக்குதான் அதிக தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்று பல வாக்கு கணிப்புகள் கூறியுள்ளன. இந்த சூழ்நிலையில் இரு தலைவர்களும் சந்தித்துப் பேசியுள்ளது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
வாக்கு கணிப்புகள் மகா கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அகிலேஷ் யாதவுடன் மாயாவதி விவாதித்ததாகத் தெரிகிறது. தேசிய அளவில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும் என்ற கணிப்பு இரு தலைவர்களுக்கும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவே தெரிகிறது. ஏனெனில், உத்தரப் பிரதேசத்தில் அதிக தொகுதிகளில் வென்றால் மத்தியில் ஆட்சி அமைப்பதில் தாங்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம் என்று மாயாவதியும், அகிலேஷும் திட்டமிட்டிருந்தனர்.
இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.