உத்தரப் பிரதேச மாநில அமைச்சரவையிலிருந்து, சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர் திங்கள்கிழமை நீக்கப்பட்டார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையை ஏற்று, இதற்கான உத்தரவை மாநில ஆளுநர் ராம் நாயக் திங்கள்கிழமை பிறப்பித்தார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான சுஹல்தேவ் பாரதிய சமாஜ், உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2017-இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் ராஜ்பர், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார்.
அண்மைக் காலமாக, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை ராஜ்பர் முன்வைத்தார். தனது கட்சியை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கைகளில் பாஜக ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டினார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவின் சின்னத்திலேயே போட்டியிடுமாறு நிபந்தனை விதிக்கப்பட்டதால், தனித்து போட்டியிடுவதாக ராஜ்பர் அறிவித்தார். பல்வேறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்ததுடன், சில தொகுதிகளில் காங்கிரஸூக்கும், பகுஜன்சமாஜ்-சமாஜவாதி கூட்டணிக்கும் ஆதரவளிப்பதாக கூறினார். அண்மையில் தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜகவினரை காலணிகளால் தாக்க வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், மாநில அமைச்சரவையிலிருந்து ஓம் பிரகாஷ் ராஜ்பரை நீக்க வேண்டுமென ஆளுநர் ராம் நாயக்கிற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை பரிந்துரை செய்தார். அதனை உடனடியாக ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் மாற்றுத் திறனாளிகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் பதவியிலிருந்து அவரை விடுவித்தார்.
இதேபோல், மாநில அமைச்சர் அந்தஸ்தில் இருக்கும் சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் இதர எம்எல்ஏக்களையும் அவர்களது பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் என்ற பரிந்துரையையும் ஆளுநர் ஏற்றுக் கொண்டார்.
பாஜக கருத்து: சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சியின் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், கூட்டணி தர்மத்தை சிதைத்துவிட்டார். எனவேதான், கடுமையான நடவடிக்கையை முதல்வர் யோகி ஆதித்யநாத் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்று பாஜக தலைவர் மகேந்திர நாத் பாண்டே தெரிவித்துள்ளார்.