பயங்கரவாதத்தில் இருந்து இளைஞர்களை விலக்கி வைக்கும் நோக்கில், பயங்கரவாத எதிர்ப்பு தினத்தை (மே 21) கடைப்பிடிக்குமாறு அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதம் குறித்தும், பயங்கரவாத செயல்களினால் ஏற்படும் விளைவுகள், உயிரிழப்புகள் குறித்தும் இளைஞர்கள் உள்பட அனைவரது மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் பயங்கரவாத எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, தற்கொலைப்படை பயங்கரவாதத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அந்த தினம் இந்தியாவில் பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த தினத்தை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் கடைப்பிடிக்க வேண்டுமென்று யுஜிசி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: பயங்கரவாத செயல்கள், தேச நலனுக்கு எத்தகைய தீய விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதை இளைஞர்கள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் பயங்கரவாதத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அதற்காகதான் ஆண்டுதோறும் மே 21-ஆம் தேதி பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அந்த தினத்தில், தேசப்பற்று குறித்த விவாதங்கள், போட்டிகள், குறும்படங்கள், உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை கல்லூரிகள் நடத்தலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.