காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்கி காயமடைந்த பிடிபி தொண்டர் பலி

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தொண்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். 

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் சுடப்பட்ட மக்கள் ஜனநாயகக் கட்சி (பிடிபி) தொண்டர் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
குல்காம் மாவட்டம், ஜூங்கல்போரா கிராமத்தில் வசித்து வருபவர் முகமது ஜமால். அவர் ஞாயிற்றுக்கிழமை இரவு அவரது இல்லத்தில் இருந்த போது, பயங்கரவாதிகளால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 
இச்சம்பவத்துக்கு பிடிபி தலைவரும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி கண்டனம் தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது: காஷ்மீரில் நமது கட்சி தொண்டர் கொல்லப்பட்ட சம்பவத்தால் நெஞ்சம் பதறுகிறது. அவரைச் சார்ந்தவர்கள் பாதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த பாதகச் செயலை புரிந்துள்ளனர். புனித ரமலான் மாதத்தில், இரும்பு மனம் கொண்டவர்களால் இந்த வன்முறை நிகழ்த்தப்பட்டுள்ளது. இச்செயலால் அவர்கள் முஸ்லிம் என்று அழைக்கவே அருகதையற்றவர்களாகி விட்டனர் என்று அதில் தெரிவித்துள்ளார். 
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், அண்மையில் அரசியல் களத்தில் நுழைந்தவருமான ஷா பைசல் மற்றும் மார்க்சிஸ்ட் தலைவருமான எம்.ஒய்.தரிகாமியும் இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.  இதுகுறித்த கண்டன அறிக்கையில் தரிகாமி கூறியிருப்பதாவது: பொதுமக்கள் மீது சிறிதும் கருணை கொள்ளாமல் கடுமையான மோதல் போக்கை கடைபிடித்து வரும் இதுபோன்ற செயல் வன்மையான கண்டனத்துக்குரியது.  பொதுமக்கள் தரப்பிலோ அல்லது எதிர்தரப்பிலோ துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகும் சம்பவங்களால் விலை மதிப்பற்ற மனித உயிர்களுக்குதான் இழப்பு ஏற்படுகிறது என்பதை இருதரப்பினரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com