சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சட்டப் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக, கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சட்டப் பாதுகாப்புடன் கூடிய ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம்
சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கு: சட்டப் பாதுகாப்பை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ராஜீவ் குமார் மனு

சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில் முன்ஜாமீன் பெறுவதற்காக, கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சட்டப் பாதுகாப்புடன் கூடிய ஒரு வார கால அவகாசத்தை உச்சநீதிமன்றம் அளித்திருந்த நிலையில், அதனை நீட்டிக்கக் கோரி, அவர் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை நீக்கி, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி உத்தரவிட்டது. அதேசமயம், அவர் 7 நாள்களுக்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. 
இந்நிலையில், நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய  உச்சநீதிமன்ற விடுமுறை கால அமர்வு முன் திங்கள்கிழமை ஆஜரான ராஜீவ் குமாரின் வழக்குரைஞர், மனுவொன்றை தாக்கல் செய்தார். 
அதில், "கொல்கத்தாவில் வழக்குரைஞர்களின் வேலைநிறுத்தம் காரணமாக நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், உச்சநீதிமன்றம் அளித்த கால அவகாசத்தில் 4 நாள்கள் வீணாகிவிட்டது. எனவே, கால அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும்' என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜீவ் குமாரின் வழக்குரைஞர் கோரிக்கை விடுத்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், "இந்த விவகாரத்தில், மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்திருக்கிறது. எனவே, பொருத்தமான அமர்வு முன் மனுவை பட்டியிலிடக் கோரி, உச்சநீதிமன்ற பதிவாளரை அணுகுங்கள்' என்றனர். 
பின்னணி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா நகர முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. 
இதுதொடர்பாக  ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது. இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com