மக்களவைத் தேர்தல் முடிவுகள், வரும் 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, தில்லியில் எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மையைப் பெறத் தவறினால், ஆட்சியமைக்க உரிமை கோரும் வகையில், ஒரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதற்காக, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்.
மம்தாவுடன் சந்திரபாபு நாயுடு சந்திப்பு: இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை அவர், கொல்கத்தாவில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, காங்கிரஸின் ஆதரவுடன் பிராந்தியக் கட்சிகளை ஒருங்கிணைத்து மத்தியில் ஆட்சியமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து அவர்கள் விவாதித்தாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிவுகள், வரும் வியாழக்கிழமை வெளியாக இருப்பதால், அரசியல் சூழல் குறித்து விவாதிப்பதற்காக, தில்லியில் எதிர்க்கட்சித் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளனர். இக்கூட்டத்தில், காங்கிரஸ், தெலுங்கு தேசம், இடதுசாரி கட்சிகள், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர். கூட்டத்துக்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், தேர்தல் ஆணைய அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு சட்டப் பேரவைத் தொகுதியிலும் ஏதாவது 5 வாக்குச்சாவடிகளில், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரிபார்க்க வேண்டும்.
இந்நிலையில், ஒரு சட்டப் பேரவைத் தொகுதியில் ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் குளறுபடி நடந்தது கண்டறியப்பட்டால், அந்தத் தொகுதியில் பதிவான அனைத்து வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுடன் எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகளிடம் எதிர்க் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு?: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது என்று சந்திரபாபு நாடு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தில்லியில் வாக்குப்பதிவு இயந்திரங்களும், கட்டுப்பாட்டு இயந்திரங்களும் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சில இடங்களில் வெளியில் இருந்த அலைவரிசையைப் பயன்படுத்தி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான தகவல்களை மாற்றிவிட்டதாகக் கூறப்படுகிறது. எனவே, வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பது குறித்து அனைத்து கட்சிகளும் தீவிரமாக யோசித்து வருகின்றன. ரூ.9,000 கோடி செலவில் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. இது ஆடம்பரச் செலவுதானே.
வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணி ஒப்பிட்டால், தேர்தல் முடிவுகள் வெளியாக 6 மணி நேரம் தாமதமாகும் என்று கூறுகிறார்கள். 72 நாள்களாக காத்திருந்த நமக்கு மேலும் 2-3 நாள்கள் காத்திருக்க முடியாதா? தொலைபேசியில் ஒட்டுக்கேட்பது போல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியும். எனவே, வாக்கு எண்ணிக்கை சரியாக நடைபெற ஒரே வழி, வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும், வாக்கு ஒப்புகைச் சீட்டுகளையும் எண்ணி சரிபார்ப்பதுதான் என்றார் அவர்.