மத்தியில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சியமைக்கும் என்று பெரும்பாலான வாக்கு கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், அந்த கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் இந்தச் சந்திப்பில், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமார், சிவசேனை கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்டோர் பங்கேற்க இருப்பதாகத் தகவல்கள் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தலுக்கான இறுதிக் கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை முடிவடைந்ததும், பல்வேறு செய்தித் தொலைக்காட்சிகள் வாக்கு கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. அவற்றில் பெரும்பாலானவை, மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமையும் என்று தெரிவித்துள்ளன. இதனால், பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, செவ்வாய்க்கிழமை விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த விருந்து நிகழ்வின்போது, கூட்டணியை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விருந்து நிகழ்வுக்கு முன்னதாக, பாஜகவைச் சேர்ந்த முக்கியத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம், தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. இதில், அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்கள் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முதல்வர், துணை முதல்வர் பங்கேற்பு: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செவ்வாய்க்கிழமை தில்லி வருகை தருகின்றனர்.