ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு தடை

தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமலாக்கத் துறை இயக்குநர் சஞ்சீவ் குமார் மிஸ்ரா பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அமலாக்கத் துறையால் நடத்தப்படும் விசாரணை குறித்த தகவல்கள், ஊடகத்தில் வெளியாகியிருப்பது கவனத்துக்கு வந்துள்ளது. இதனால் அமலாக்கத் துறையின் விசாரணை பாதிக்கப்படக்கூடும்.
இதை கவனத்தில் கொண்டு, தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்திலும், தலைமையக விசாரணை பிரிவுகளிலும் பணிபுரியும் அதிகாரிகளுக்கு, ஊடகங்களுக்கு பேட்டியளிக்க தடை விதிக்கப்படுகிறது. ஊடகங்களுக்கு பேட்டியளிக்க அனுமதிக்கப்பட்டுள்ள அதிகாரியை தவிர்த்து வேறு அதிகாரிகள் யாரேனும் பேட்டியளித்தால், அமலாக்கத் துறை முதன்மை சிறப்பு இயக்குநர் அல்லது இயக்குநர் அந்தஸ்து கொண்ட அதிகாரியின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும்.
ஊடகங்களுக்கு பேட்டியளிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை அமலாக்கத் துறை அதிகாரிகள் யாரேனும் மீறும் பட்சத்தில், அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள அமலாக்கத் துறை மண்டல அலுவலகங்கள் நடத்தும் விசாரணைகளை மேற்பார்வையிடுவதுடன், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை, ஹவாலா பரிவர்த்தனைகள் தொடர்பான சில முக்கிய விசாரணைகளை தில்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகம் மேற்கொண்டுள்ளது. 
இந்நிலையில், தில்லி அமலாக்கத் துறை தலைமையகத்தால் நடத்தப்படும் விசாரணை குறித்த தகவல்கள், சில அதிகாரிகளால் ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்தே, அமலாக்கத் துறை இயக்குநர் ராஜீவ் குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com