சொத்துக் குவிப்பு வழக்கில் முலாயம், அகிலேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்
சொத்துக் குவிப்பு வழக்கில் முலாயம், அகிலேஷ் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தகவல்


வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக சமாஜவாதி நிறுவனர் முலாயம் சிங் யாதவ், அவரது மகனும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் போதிய அடிப்படை ஆதாரம் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, கடந்த 1999-2005-ஆம் ஆண்டு காலகட்டத்தில் முதல்வராக இருந்த முலாயம் சிங் யாதவ் தனது வருமானத்துக்கு பொருந்தாத வகையில் ரு.100 கோடிக்கு மேல் சொத்துகளை வாங்கிக் குவித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. 
மேலும், முலாயம், அகிலேஷ், அவரது மனைவி டிம்பிள், முலாயமின் மற்றொரு மகன் பிரதீக் உள்ளிட்டோர், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாகவும்; இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், காங்கிரஸைச் சேர்ந்த  விஸ்வநாத் சதுர்வேதி என்பவர் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2005-இல் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் கடந்த 2007-இல் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், முலாயம் உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, முலாயம், அகிலேஷ், பிரதீக் ஆகியோர் தாக்கல் செய்த மறுஆய்வு மனுக்கள், 2012-இல் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேவேளையில், அகிலேஷின் மனைவி டிம்பிளுக்கு எதிரான விசாரணையை கைவிடும்படி சிபிஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்திலோ அல்லது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திலோ விசாரணை நிலை அறிக்கை தாக்கல் செய்யுமாறு சிபிஐ-க்கு உத்தரவிடக் கோரி, உச்சநீதிமன்றத்தில் விஸ்வநாத் சதுர்வேதி புதிய மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அமர்வு முன் கடந்த மாதம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, முலாயம், அகிலேஷுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு, 2013-ஆம் ஆண்டில் கைவிடப்பட்டதாக சிபிஐ தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். இதையடுத்து, புதிய மனு மீது 4 வாரங்களுக்குள் விரிவாக பதிலளிக்கும்படி சிபிஐ-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையடுத்து, சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்
கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. அதில், முலாயம் சிங், அகிலேஷ் யாதவ் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் எவ்வித அடிப்படை ஆதாரங்களும் கிடைக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முலாயம், அகிலேஷ் ஆகியோர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவது உறுதியாகிவிட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com