நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நிறுவனம் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக தொடுத்திருந்த அவதூறு வழக்குகளை திரும்பப் பெற அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிடுவதற்கு 10 நாள்களுக்கு முன்பாக, ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்தை அனில் அம்பானி தொடங்கியதாக நேஷனல் ஹெரால்டு பத்திரிகையில் கட்டுரை வெளியானது.
அதையடுத்து அந்த பத்திரிகையின் ஆசிரியர் ஜாஃபர் ஆகா, கட்டுரையை எழுதிய பத்திரிகையாளர் விஷ்வதீபக் ஆகியோருக்கு எதிராக குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் சிவில் நீதிமன்றத்தில் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் உள்ளிட்ட அனில் அம்பானியின் நிறுவனங்கள் அவதூறு வழக்கு தொடர்ந்தன.
அதைத்தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர்கள் ரண்தீப் சுர்ஜேவாலா, அசோக் சவாண், அபிஷேக் மனு சிங்வி, சஞ்சய் நிருபம் உள்ளிட்டோர் ரஃபேல் ஒப்பந்தத்தில் தவறான கருத்துகளை கூறி மக்களை ஏமாற்றுவதாகவும், நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் அவர்கள் கருத்து தெரிவிப்பதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் அவதூறு வழக்கு தொடர்ந்தது.
இதற்காக நேஷனல் ஹெரால்டு நிறுவனமும், காங்கிரஸ் தலைவர்களும் இணைந்து ரூ. 5, 000 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று ரிலையன்ஸ் நிறுவனச் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த அவதூறு வழக்குகளை திரும்ப பெற அனில் அம்பானி முடிவு செய்துள்ளதாக அவரது தரப்பு வழக்குரைஞர், நேஷனல் ஹெரால்டு நிறுவனம் மற்றும் காங்கிரஸ் தரப்பு வழக்குரைஞர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் தரப்பு வழக்குரைஞர்கள் கூறுகையில், அவதூறு வழக்கை திரும்பப் பெறுவதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்துக்கு கோடைக்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், விடுமுறைக்கு பின்னர் அதிகாரப்பூர்வமாக வழக்கை திரும்பப் பெறுவதற்கான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றார்.