2014-இல் இருந்த மோடி அலை இந்த தேர்தலில் சுனாமியாக மாறியுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் தெரிவித்துள்ளார்.
17-வது மக்களவைத் தேர்தலில், 350 இடங்கள் வரை முன்னிலை வகித்து வரும் பாஜக கூட்டணி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைப்பதற்கு ஆயத்தமாகி வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது,
"முந்தைய தேர்தலில் மோடி அலை வீசியது. அது தற்போது சுனாமியாக மாறியுள்ளது. தற்போதைய நிலவரங்களை பார்க்கும் போது மகாராஷ்டிராவில் எங்களுடைய எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று நினைக்கிறேன். அது எங்களுடைய பொறுப்பையும் அதிகரித்துள்ளது.
பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் அவரது ஈர்ப்பு இந்த முறை மிகப் பெரிய வெற்றியை பெற்றுத் தந்துள்ளது.
பாஜக மற்றும் சிவ சேனா ஒருவருக்கொருவர் உதவி புரிந்து ஒற்றுமையை கடைபிடித்துள்ளது. அது இரண்டு கட்சிகளையுமே அதிக இடங்களில் வெற்றி பெறச் செய்துள்ளது" என்றார்.