புது தில்லி: தனது ட்விட்டர் கணக்கில் இருந்து 'சவ்கிதார்' பட்டத்தை நீக்கியுள்ள மோடி அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார்.
நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலுக்கான முடிவுகள் தொடர்ச்சியாக அறிவிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இதில் பாரதிய ஜனதா கட்சி மட்டும் அறுதிப் பெரும்பான்மைக்கான 272 இடங்களுக்கு மேலாக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக மோடி மீண்டும் இந்திய பிரதமராக வருவது உறுதியாகி விட்டது.
நாடாளுமன்ற தேர்தல் பிரசார சமயத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ரஃபேல் ஊழல், நீரவ் மோடி உள்ளிட்ட விவகாரங்களைக் குறிவைத்து, பிரதமர் மோடியை ' காவலாளியே திருடன்' என்னும் பொருள்பட விமர்சித்தார்.
இதற்கு எதிர்வினையாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கில் காவலாளி என்னும் பொருள்படும் 'சவ்கிதார்' என்னும் சொல்லைச் சேர்த்துக் கொண்டார். அவரைப் பின்பற்றி மத்திய அமைச்சர்கள் உட்பட பாஜக தலைவர்கள் பலர் மற்றும் பாஜக தொண்டர்களும் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் கணக்கில் தங்கள் பெயருடன் 'சவ்கிதார்' இணைத்துக் கொண்டனர். அதையொட்டி தீவிர பிரச்சாரங்களும் நடைபெற்றன.
இந்நிலையில் தனது ட்விட்டர் கணக்கில் இருந்து 'சவ்கிதார்' பட்டத்தை நீக்கியுள்ள மோடி அதற்கு ஒரு விளக்கமும் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
இந்திய மக்கள் ஒவ்வொருவரும் 'சவ்கிதார்' ஆக மாறி தேசத்திற்கு சிறந்த சேவையாற்றினர். ஜாதி, மதம், ஊழல் மற்றும் குடும்ப ஆட்சி ஆகிய தீமைகளில் இருந்து இந்தியாவைக் காப்பாற்ற ஒரு வலிமையான அடையாளமாக 'சவ்கிதார்' மாறி விட்டது.
தற்போது 'சவ்கிதார்' என்னும் உணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நேரம் வந்து விட்டது.
அந்த உணர்வை எப்போதும் உயிர்ப்பாக வைத்திருந்து, தேசத்தின் வளர்ச்சிக்கான சேவையைத் தொடருங்கள்.
'சவ்கிதார்' என்னும் சொல் இப்போது எனது ட்விட்டர் கணக்கில் இருந்து நீக்கப்படுகிறது. ஆனால் அது எனது ஒருங்கிணைந்த பகுதியாக மாறி விட்டது. நீங்களும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.