ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நிகழ்ந்த குண்டுவெடிப்பில் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 7 வீரர்கள் காயமடைந்தனர்.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் புதன்கிழமை கூறியதாவது:
பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் உள்ள மெந்தார் நிலை அருகே மெட்ராஸ் ரெஜிமென்ட் பிரிவைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் புதன்கிழமை காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 8 வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அதில் ஒரு வீரர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறினார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதிகள் மற்றும் சர்வதேச எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை புதைத்து வைப்பதும், அதில் இந்திய வீரர்களுக்கு காயம் ஏற்படுவதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபடுவதாக அந்நாட்டு ராணுவ தளபதியே கடந்த 2013-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே, இந்த விபத்தின் பின்னணியிலும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.