எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறை கடுமையான சவால்களை எதிர்கொள்ளும் என்பதால், பாதுகாப்புப் படைகளின் வலிமையை அதிகரிக்கச் செய்ய வேண்டியது அவசியம் என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் வலியுறுத்தினார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் வருடாந்திர விருது வழங்கும் விழா, தில்லியில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அஜித் தோவல் மேலும் கூறியதாவது:
எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள படைகளில், மிகப்பெரியது எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்). நாட்டின் எல்லைப் பகுதிகளைப் பாதுகாப்பை உறுதிசெய்வதில், பிஎஸ்எஃப் படையின் பங்கு சிறப்பானதாக உள்ளது.
பிஎஸ்எஃப் போன்ற படையினர் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, தளவாடங்களை நவீனப்படுத்த முயன்று வருவது திருப்தியளிக்கிறது.
மேலும், எதிர்காலத்தில் பாதுகாப்புத் துறை கடுமையான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, பாதுகாப்புப் படைகள் தொழில்முறை ரீதியில் தங்களை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாதுகாப்புப் படையினர் தங்களுடைய திறமைகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வேண்டும். அதுமட்டுமன்றி தற்போது பயன்படுத்தி வரும் தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்றார் அவர்.
வீர தீரச் செயல்களுக்கு விருது: நிகழ்ச்சியில் முன்னதாக, பணியின்போது சிறப்பாக செயல்பட்ட பிஎஸ்எஃப் வீரர்களுக்கு வீர தீரச் செயல்களுக்கான விருதுகளையும், பதக்கங்களையும் வழங்கி அஜித் தோவல் கெளரவித்தார்.
டிஐஜி பல்ஜித் சிங் கசானா, துணை கமாண்டன்ட் யுத்வீர் யாதவ், துணை ஆய்வாளர்கள் சுர்ஜித் சிங் பீஷ்னோய், ஓம் பிரகாஷ், காவலர்கள் பரசுராம், விபாஸ் பத்பயால் உள்ளிட்டோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இந்தக் குழுவினர், ஜம்முவில் இந்திய, பாகிஸ்தான் எல்லையில் கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஊடுருவல் முயற்சியை முறியடித்தனர். இதேபோல், கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபரில், ஜம்மு அருகே பயங்கரவாதி ஒருவரைச் சுட்டுக் கொன்றதற்காக, பூபிந்தர் சிங்குக்கு விருது வழங்கப்பட்டது. தில்லியில் உள்ள காமன்வெல்த் கிராமத்தில் மின்சாரம் தாக்கிய சிறுமியை மின்கம்பத்தில் இருந்து காப்பாற்றியதற்காக, டிஐஜி ஆஸாத் சிங் மாலிக்குக்கு உத்தம் ஜீவன் ரக்ஷா பதக் விருது வழங்கப்பட்டது.