பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான உத்தரவை தில்லி நீதிமன்றம் ஜுன் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
கடந்த 2016-ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி ராணுவ வீரர்களின் ரத்தத்தை வைத்து வியாபாரம் செய்கிறார் என்றும் ராணுவ வீரர்களின் தியாகத்தின் மூலம் ஆதாயம் அடைய முயலுகிறார் என்றும் ராகுல் காந்தி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை, தேசப் பாதுகாப்பு போன்ற விஷயங்களை தேர்தல் பிரசாரத்தில் மோடி பயன்படுத்தியதைச் சுட்டிக்காட்டி ராகுல் இவ்வாறு பேசினார். இதையடுத்து, ராகுல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட வலியுறுத்தி தில்லி பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் ஜோகிந்தர் தூலி என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இது தொடர்பாக பதிலளிக்குமாறு தில்லி போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 15-ஆம் தேதி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த தில்லி போலீஸார், ராகுல் காந்தி மோடிக்கு எதிராக அவதூறாகப் பேசியது உண்மைதான் என்று கூறியிருந்தது.
இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராகுல் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்த முடிவை ஜூன் 7-ஆம் தேதி அறிவிப்பதாகக் கூறிய நீதிபதி சமர் விஷால், வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்தார்.