ராம்பூர்: அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழவில்லை என்று நிரூபித்தால் 8 நாட்களில் ராஜிநாமா செய்து விடுவதாக எதிர்க்கட்சிகளுக்கு சமஜ்வாதி கட்சி எம்.பி ஒருவர் சவால் விடுத்துள்ளார்.
தேர்தல் சமயத்தில் பாஜ கட்சியில் சேர்ந்த முன்னாள் பாலிவுட் நடிகையான ஜெயப்பிரதாவுக்கு . உ.பி மாநிலம் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் வழங்கப்பட்டது. அவரை எதிர்த்து ஜெயப்பிரதாவை அரசியலில் வளர்த்து விட்டவரான சமாஜ்வாதிக் கட்சியின் சார்பாக முக்கியத் தலைவரான ஆஸம் கான் போட்டியிட்டார்.
வியாழனன்று வெளியான தேர்தல் முடிவுகளில் ஜெயப்பிரதாவை ஆஸம் கான் 1.09 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்
இந்நிலையில் அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழவில்லை என்று நிரூபித்தால் 8 நாட்களில் ராஜிநாமா செய்து விடுவதாக எதிர்க்கட்சிகளுக்கு சமஜ்வாதி கட்சி எம்.பி ஆஸம் கான் சவால் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ராம்பூரில் செய்தியாளர்களிடம் வெள்ளியன்று பேசிய அவர் கூறியதாவது:
அனைத்து சமுதாயத்தினரின் வாக்குகள் எனக்கு விழுந்துள்ளது. இதை நீங்கள் வாக்குச் சாவடிகளில் சரிபார்த்துக் கொள்ளலாம்.எனது அரசியல் எதிரிகளுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது என்னவென்றால், இதைத் தவறு என்று நிரூபித்தால் 8 நாட்களில் நான் எனது எம்பி பதவியை ராஜிநாமா செய்து விடுகிறேன்.
சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு ஏன் எதிர்பாத்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறித்து கட்சியின் மூத்த தலைவர்கள் விரைவில் கூடி ஆலோசிப்பார்கள். தேர்தல் பிரசாரம் செய்யக்கூடாது என்று எனக்கு மூன்று நாட்கள் தடை விதிக்கப்பட்டது எனக்கு இழைக்கப்பட்ட அநீதி. அவவாறு நடக்கவில்லை என்றால் நான் மூன்று லட்சம் வாக்குகள் கூடுதலாக பெற்றிருப்பேன்.
பிரதமர் மோடி தனக்கு அளிக்கப்பட்டு இருக்கும் மாபெரும் தீர்ப்பை மனதில் கொண்டு, சமூகத்தில் யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லாமல் சிறப்பாகச் செயல்படுவார் என்று நமபுகிறேன்.
பிரசாரத்தில் ஜெயப்பிரதாவை நான் விமர்சித்ததாக என்னை தேவை இன்றி குற்றம் சாட்டினார்கள்.
இவ்வாறு அவர் குற்றம் சாட்டியுள்ளார்.