உச்சநீதிமன்றத்துக்கு நியமனம் செய்யப்பட்ட 4 புதிய நீதிபதிகள் வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளனர்.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான கொலீஜியம் அமைப்பு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு கடந்த புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.
இதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கினார். இதைத் தொடர்ந்து, புதிய நீதிபதிகள் நால்வரும் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளனர்.
அவர்கள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் பதவிப் பிரமாணம் செய்துவைக்க இருப்பதாக உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.