கேரளத்தில் பாஜகவுக்கு அடுத்த முறை சிறப்பான வெற்றி கிடைக்கும் என்று அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் தெரிவித்துள்ளார்.
இந்த மக்களவைத் தேர்தலில் இதுவரை அதிக வெற்றியைப் பெறாத மேற்கு வங்கம், ஒடிஸா, கேரளம் ஆகிய மாநிலங்களுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்தது. தேர்தலுக்கு முன்பிருந்தே பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த மூன்று மாநிலங்களிலும் அதிகம் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். தேர்தல் பிரசாரத்திலும் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா ஆகியோர் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் அதிக கவனம் செலுத்தினர். இதில் மேற்கு வங்கம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் கடந்த தேர்தலைவிட பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது. அதே நேரத்தில் கேரளத்தில் பாஜகவுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
தில்லியில் செய்தியாளர்களிடம் இது தொடர்பாக ஜி.வி.எல். நரசிம்ம ராவ் பேசியதாவது:
இந்த முறை மேற்கு வங்கம், ஒடிஸாவில் பாஜக சிறப்பானதொரு வெற்றியைப் பதிவு செய்துள்ளது. அதேபோல அடுத்த முறை கேரளத்திலும் பாஜகவுக்கு சிறப்பான வெற்றி கிடைக்கும். இதற்காக பாஜக முழுமூச்சுடன் பாடுபடும். கேரளத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். தேசிய அளவில் பாஜகவுக்கு சிறப்பான வெற்றியை மக்கள் பரிசளித்துள்ளனர். இது கடந்த 5 ஆண்டுகால மோடியின் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்றார் அவர்.