மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வரலாறு காணாத தோல்வியை கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎஃப் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அங்கு மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 இடங்களை காங்கிரஸ் தலைமையிலான யூடிஎஃப் கூட்டணி கைப்பற்றியுள்ளது.
அதிலும் குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல், வயநாடு தொகுதியில் போட்டியிட்டு இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் பி.பி. சுனீரை 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆலப்புழா தொகுதியில் மட்டுமே ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிபெற்றுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்வருமான பினராயி விஜயன் கூறுகையில், கேரளாவில் எல்டிஎஃப் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ள இந்த தோல்வி எதிர்பாராதது. எதனால் தோல்வி ஏற்பட்டது என்பது குறித்து நிச்சயம் ஆராயப்படும்.
அதிலும் குறிப்பாக மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிரான நிலை இங்கு பிரதிபலித்துள்ளது. அதனால் தான் கேரளாவில் பாஜக-வால் ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. மேலும் பாஜக மீதான எதிர்ப்பலை காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று தெரிவித்தார்.