எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்துக்கு தேர்தல் மூலம் மக்கள் பதிலளித்துவிட்டனர் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றி கிடைத்ததை அடுத்து சுட்டுரையில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தலில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வந்த பொய் பிரசாரத்துக்கும், தனிநபர்களைக் குறிவைத்து நடத்திய தாக்குதல்களுக்கும் மக்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுத்துள்ளனர். வாரிசு அரசியல், வாக்குக்காக சமரசம் செய்து கொள்வது, மதவாதம் ஆகியவற்றை மக்கள் முற்றிலும் நிராகரித்துவிட்டனர். பிரதமர் மோடி நாட்டு மக்களின் நம்பிக்கையை முழுமையாக வென்றுள்ளார்.
நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும், தேச ஒருமைப்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கில் மக்கள் வாக்களித்துள்ளனர்.
இளைஞர்கள், ஏழை எளிய மக்கள், விவசாயிகள் வைத்துள்ள நம்பிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது. மோடியின் வளர்ச்சிப் பணிகளையும், வலுவான தலைமையையும் மக்கள் முழுமையாக அங்கீகரித்துள்ளனர். பிரதமர் சார்பிலும், எனது சார்பிலும் பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரித்துக் கொள்கிறேன். நாட்டில் உள்ள ஒவ்வாரு வாக்குச்சாவடி அளவிலும் கட்சியை வலுப்படுத்தியதில் பாஜக தொண்டர்கள் முக்கியப் பங்கு வகித்தனர். அவர்களது அயராத உழைப்பு பாஜகவை பல மடங்கு வலுப்படுத்தியுள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.