காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ராஜஸ்தான் மாநிலத்தில், அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளதையடுத்து, மக்களின் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம் என அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். காங்கிரஸ் எப்போதும், வலுவான ஜனநாயகம் அமைய வேண்டும் என்பதற்காக பாடுபடும் இயக்கமாக திகழ்கிறது. மாநிலத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற உதவி செய்த மக்களுக்கும், காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் தலைவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முறை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தலைமையில், கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து மக்களுக்கு கொண்டு சேர்க்க காங்கிரஸ் தொண்டர்கள் பாடுபட்டனர். தற்போதைய இந்த தோல்வியை கண்டு, அவர்கள் மனச்சோர்வு அடையத் தேவையில்லை.
தேர்தல் பிரசாரத்தின்போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டங்களை மட்டுமே விளக்கி பேசினார். ஆனால், பிரதமர் மோடியோ, தேர்தல் நடத்தை விதிகளை மீறி மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும் பேசி பிரசாரம் மேற்கொண்டார். இதனை தேர்தல் ஆணையமும் கண்டு கொள்ளவில்லை.
அதேபோல, கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் தொடர்பாகவும் பிரதமர் மோடி எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்று தெரிவித்தார் கெலாட்.