நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பி.க்கள் வரும் சனிக்கிழமை பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளதாகவும், மத்தியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக அரசு வரும் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து பாஜக ஆட்சிமன்றக்குழுவில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் வரும் சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து வாழ்த்து பெற திட்டமிட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து, புதிய அரசு அமைக்க உரிமை கோரப்பட உள்ளது.
பிரதமர் மோடி ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகளை கடைப்பிடித்து வந்தது, தேசப்பாதுகாப்பில் தெளிவான அணுகுமுறை, உலகளவில் இந்தியாவுக்கு கெளரவமான இடத்தை தேடித்தந்தது போன்ற காரணங்களால் இந்த வெற்றி சாத்தியமானது.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வந்த அபாண்டமான புகார்களை மக்கள் புறந்தள்ளி விட்டதுடன், அதுதொடர்பான எதிர்மறை கருத்துக்களையும், எதிர்க்கட்சிகளையும் மக்கள் முற்றிலுமாக புறக்கணித்து விட்டனர்.
மேற்கு வங்கத்தில் வன்முறையை ஏற்படுத்தி பாஜக தொண்டர்களை தாக்க முயன்றவர்களையும் அந்த மாநில மக்கள் புரிந்துக் கொண்டு பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளனர். அதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்ளப்பட்டது.
உத்தரப் பிரதேசம், பிகார் மாநிலங்களில் மகா கூட்டணி அமைத்த போதிலும் அதையும் கடந்து பெரும் வெற்றியை வழங்கியதற்காகவும், வடகிழக்கு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களிலும், தென்னிந்தியாவிலும் பாஜகவுக்கு பெரும் வெற்றியைத் தேடித்தந்த மக்களுக்கு ஆட்சி மன்றக்குழு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
அநேகமாக, மே 29ஆம் தேதியன்று புதிய அரசின் பதவியேற்பு விழாவும், பதவியேற்ற விழாவும் நடைபெற உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.