உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, வியாழக்கிழமை வீடு திரும்பினார்.
66 வயதாகும் ஜேட்லிக்கு, தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த ஆண்டு மே மாதம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் அவர் பொறுப்பு வகித்து வந்த நிதித் துறை, மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. பின்னர், சுமார் 100 நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மீண்டும் நிதித் துறை பொறுப்பை ஜேட்லி ஏற்றுக் கொண்டார்.
அதன் பிறகு, திசு அறுவைச் சிகிச்சைக்காகவும், புற்றுநோயைக் கண்டறியும் பரிசோதனைக்காகவும் கடந்த ஜனவரி மாதம் அவர் நியூயார்க் சென்றார். அப்போது, மத்திய நிதியமைச்சராகத் தற்காலிகமாக நியமிக்கப்பட்ட பியூஷ் கோயல், மத்திய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். இதையடுத்து, சிகிச்சை முடிந்து கடந்த பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி ஜேட்லி இந்தியா திரும்பினார்.
இந்நிலையில், மீண்டும் உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்ட அவர் தில்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 3 வாரங்களாக சிகிச்சை பெற்றுவந்தார். அவருக்கான சிகிச்சை நிறைவடைந்த நிலையில், வியாழக்கிழமை அவர் வீடு திரும்பினார்.