மத்திய அமைச்சரவையின் பரிந்துரைப்படி 16-ஆவது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டதை அடுத்து, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பாஜக எம்.பி.க்கள் கூட்டம் தில்லியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நரேந்திர மோடி, பிரதமராக மீண்டும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
இதனிடையே தில்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், தற்போதைய 16-ஆவது மக்களவையைக் கலைப்பதற்கு மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்தது. இதையடுத்து, மத்திய அமைச்சர்கள் தங்களது ராஜிநாமா கடிதங்களை பிரதமர் மோடியிடம் கூட்டாக அளித்தனர். அதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து தனது ராஜிநாமா கடிதத்தையும், அமைச்சர்களின் ராஜிநாமா கடிதங்களையும் அளித்தார்.
அப்போது அவர்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட ராம்நாத் கோவிந்த், புதிய அரசு ஆட்சியமைக்கும் வரை பதவியில் தொடருமாறு கேட்டுக் கொண்டார். இந்நிலையில் மத்திய அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று 16-ஆவது மக்களவையை கலைத்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே மக்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அளித்துள்ளார்.