ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை, பிரதமர் நரேந்திர மோடியால் நீக்க முடியாது என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், பெரும்பான்மை பலத்துடன் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தேர்தலுக்கு முன்பு பாஜக பல்வேறு வாக்குறுதிகள் அளித்திருந்தது. அதில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-ஆவது பிரிவு நீக்கப்படும் என்பது முக்கியமானதாகும்.
இந்நிலையில், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, ஜம்முவில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
பிரதமர் மோடி, எத்தனை சக்திவாய்ந்த தலைவராக உருவெடுத்தாலும், அரசமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35ஏ ஆகிய பிரிவுகளை நீக்க முடியாது. இவ்விரு பிரிவுகளும் ஜம்மு-காஷ்மீர் மக்களின் உரிமைகளாகும். அவை எங்களுக்கு மிகவும் முக்கியமானவை. காஷ்மீர் பள்ளத்தாக்கை, நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரயில் கட்டமைப்பை ஏற்படுத்த பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ஃபரூக்.
ஸ்ரீநகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட இவர், மக்கள் ஜனநாயக கட்சியின் வேட்பாளரை விட 70,050 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.