பாட்னா: பிகாரில் அமைந்த மகா கூட்டணி மக்களவைத் தேர்தலில் படுதோல்வியடைந்த நிலையில், தோல்விக்கு யார் காரணம் என்ற அலசல் ஆரம்பமாகியுள்ளது.
பிகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையில் அமைந்த இந்த கூட்டணி, ஒரு தொகுதியில் கூட வெற்றிக் கணக்கை தொடங்காத நிலையில், காங்கிரஸ் கட்சி எப்படியோ கிஷண்கஞ்ச் தொகுதியில் வெற்றியைப் பதிவு செய்தது.
தற்போது தோல்விக்கு ஒட்டுமொத்தக் காரணமும் ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. முதல் சர்ச்சையை காங்கிரஸ் கட்சியே தொடங்கியுள்ளது.
இது குறித்து பிகார் காங்கிரஸ் தலைவர் கௌகாப் கூறுகையில், 2020ம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுவதே சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது. ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்காமல் சொந்த பலத்திலேயே காங்கிரஸ் தேர்தலை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.