உச்சநீதிமன்றத்துக்குப் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 நீதிபதிகளும் வெள்ளிக்கிழமை பதவியேற்றனர். இதன் மூலம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அனுமதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச அளவான 31-ஐ எட்டியுள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனிருத்தா போஸ், குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். போபண்ணா, மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ஆர். கவாய், ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்களை கொலீஜியம் குழு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்திருந்தது.
புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் அவர்களின் நியமனத்துக்குக் கடந்த புதன்கிழமை ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், புதிய நீதிபதிகள் நால்வருக்கும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெள்ளிக்கிழமை பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.
இதன் மூலம் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 31-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2008-ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 31-ஆக அதிகரித்து நாடாளுமன்றம் சட்டம் இயற்றியது. அதற்குப் பிறகு தற்போதுதான் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை முழு அளவை எட்டியுள்ளது.
இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பலர் பங்கேற்றனர். பணிமூப்பு அடிப்படையில் நீதிபதி கவாய், வரும் 2025-ஆம் ஆண்டின் மத்தியில் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்க வாய்ப்புள்ளது.
அவர் பணிநிறைவு பெற்றதும், நீதிபதி சூர்ய காந்த் 2025-ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்திலிருந்து 2027-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்ற வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.