புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் நீடிப்பார் என்று செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மறுசீரமைப்புச் செய்யவும், நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும், கட்சியின் அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுலுக்கு வழங்கி காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் செயற்குழு கூட்டம் புது தில்லில் இன்று காலை தொடங்கியது. காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் தலைமையில் 3 மணி நேரத்துக்கு மேல் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று கட்சித் தலைமை பதவியை துறக்க ராகுல் முடிவு செய்தார். காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், கட்சித் தலைமை பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தி அளித்தார்.
ஆனால், ராஜினாமா கடிதத்தை ஏற்க மறுத்த செயற்குழு உறுப்பினர்கள், கட்சித் தலைவராக ராகுல் தொடர வேண்டும் என்று வலியுறுத்தி, அது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினர்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வியாழக்கிழமை வெளியாயின. இதில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 90 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் காங்கிரஸ் கட்சி மட்டும் 52 இடங்களிலும் வெற்றி பெற்றாலும், பல இடங்களில் நோட்டாவை விட குறைவான வாக்குகளையே அக்கட்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.