முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடா தோல்வியடைந்ததால், தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய ஹாசன் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற அவரது பெயரன் பிரஜ்வல் ரேவண்ணா முடிவு செய்துள்ளார்.
1991-ஆம் ஆண்டு முதல் ஹாசன் தொகுதியில் வெற்றிபெற்று வந்த தேவெ கெளடா, தனது பெயரன் பிரஜ்வல் ரேவண்ணாவுக்காக அத் தொகுதியை விட்டுக்கொடுத்துவிட்டு தும்கூரு தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அத் தொகுதியில் தேவெ கெளடா தோல்வியடைந்தார்.
இந்த நிலையில், ஹாசன் தொகுதியில் மஜத வேட்பாளராகப் போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஏ.மஞ்சுவை தோற்கடித்து வெற்றி பெற்றார்.
மக்களவைத் தேர்தலில் 7 தொகுதிகளில் போட்டியிட்ட மஜத, ஹாசன் தொகுதியில் மட்டுமே வென்றது. இந்த நிலையில், தனது தாத்தா எச்.டி.தேவெ கெளடாவுக்கு நேர்ந்த தோல்வியால் துவண்டுள்ள பிரஜ்வல் ரேவண்ணா, அவரை மீண்டும் மக்களவைக்கு அனுப்பி வைக்க ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து பிரஜ்வல் ரேவண்ணா கூறியது: ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை முன்னாள் பிரதமர் எச்.டி.தேவெ கெளடாவுக்காக விட்டுக் கொடுத்து ராஜிநாமா செய்ய முடிவு செய்திருக்கிறேன். இந்த முடிவை தேவெ கெளடாவிடம் தெரிவித்து, ஒத்துக்கொள்ள முயற்சிப்பேன்.
எனது முடிவை ஹாசன் மக்களும், மஜத தொண்டர்களும் ஏற்பார்கள் என்று நம்புகிறேன். தேவெ கெளடாவுக்கு மீண்டும் வெற்றியைத் தேடித் தந்து, மக்களவைக்கு அனுப்புவதற்காகவே ஹாசன் தொகுதி எம்.பி. பதவியை ராஜிநாமா செய்ய முன்வந்துள்ளேன்.
எச்.டி.தேவெ கெளடா, மஜதவின் அடித்தளமானவர். மஜதவினருக்கு நம்பிக்கை தருவதற்காக ஹாசனில் மீண்டும் அவர் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்றார்.