மதம், ஜாதி பெயரிலான கட்சிகளின் பதிவை மறுஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதில் அளிக்குமாறு மத்திய அரசு, தேர்தல் ஆணையம் ஆகியவற்றுக்கு தில்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக, பாஜக செய்தித் தொடர்பாளரும், வழக்குரைஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய் தில்லி உயர்நீதிமன்றத்தில் அண்மையில் பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், "மத அடிப்படையிலான பெயர்கள், தேசியக் கொடியை பிரதிப்பலிக்கும் சின்னங்கள் ஆகியவை மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி தவறாகும்.
எனவே, தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்துவதற்கு மதம், ஜாதி, இனம், மொழி ஆகிய அடிப்படையிலான கட்சிகளின் பதிவை தேர்தல் ஆணையம் மறுஆய்வு செய்ய வேண்டும். தேசியக் கொடியை போன்ற கொடியை பயன்படுத்தாமல் இருக்க தடை விதிக்க வேண்டும். இவற்றை 3 மாதங்களில் மாற்றிக் கொள்ளாத கட்சிகளின் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும், அத்தகைய கட்சிகளுக்கு உதாரணமாக, காங்கிரஸ் கட்சி, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், ஹிந்து சேனா போன்றவற்றை தனது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த மனு தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி ஏ.ஜே. பம்பானி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பொது நல வழக்கு தொடர்பாக பதில் அளிக்க தேர்தல் ஆணையம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் அமர்வு, வழக்கு விசாரணையை ஜூலை 17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.