மேலிடத் தலைவர்களுடனான ஆலோசனைக்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அமோக வெற்றியை மக்கள் தேடித் தந்துள்ளனர். 2 தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. மற்றொரு தொகுதியில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கூட்டணி அரசுக்கு மக்களிடத்தில் ஆதரவு இல்லை எனப் புரிந்துள்ளது. காங்கிரஸ், மஜத கட்சிகளில் உள்கட்சி பூசலால், அக் கட்சியின் ஒரு சில எம்.எல்.ஏக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். அதிருப்தியடைந்தவர்களின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்குமா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது உள்ள சூழலில் அது குறித்து எந்தக் கருத்தையும் கூறத் தயாராக இல்லை. விரைவில் தில்லி சென்று பாஜக மேலிடத் தலைவர்களுடன் ஆலோசனை செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
மேலும், கடந்த 40 ஆண்டுகளாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். அந்த அனுபவத்தில் மக்களவைத் தேர்தலில் 22 தொகுதிகளுக்கும் அதிக அளவில் வெற்றி பெறுவோம் எனக் கூறினேன். எனது எதிர்பார்ப்பையும் மீறி, மக்கள் பாஜகவை 25 தொகுதிகளில் வெற்றி பெறச் செய்துள்ளனர். பாஜக ஆதரவு அளித்த சுயேச்சை வேட்பாளர் சுமலதாவும் வெற்றி பெற்றுள்ளார். அவர் சுயேச்சையாக செயல்படுகிறாரா அல்லது பாஜகவில் இணைந்து பணியாற்றுகிறாரா என்பது குறித்து அவரே முடிவு எடுக்க வேண்டும். அவரை பாஜகவில் இணையுமாறு நாங்கள் வற்புறுத்த மாட்டோம் என்றார் எடியூரப்பா.