வங்கதேசத்தில் இயங்கி வரும் ஜமாத்-உல்-முஜாகிதீன் பங்களாதேஷ் (ஜேஎம்பி) என்ற பயங்கரவாத அமைப்பை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
கடந்த 2016ஆம் ஆண்டு வங்க தேச தலைநகரான டாக்காவில் உள்ள ஒரு உணவு விடுதிக்குள் புகுந்த பயங்கரவாதிகள், வெளிநாட்டினர் உள்பட 22 பேரை சுட்டுக் கொன்றனர். ஜேஎம்பி இயக்கத்தால் இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் பயங்கரவாதத்தை ஒடுக்கவும், இளைஞர்கள் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருகட்டமாக, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் -1967இன் படி, ஜேஎம்பி அமைப்பின் செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ஸாம் மாநிலத்தில் ஜேஎம்பி அமைப்பினர் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.