சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தது.
லண்டனில் பிரையன்ஸ்டன் சதுக்கத்தில் உள்ள சொத்து ஒன்றை, சட்டவிரோதமாக வாங்கியதாக வழக்கு விசாரணையை ராபர்ட் வதேரா எதிர்கொண்டு வருகிறார்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், தில்லி மற்றும் ஜெய்ப்பூரில் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன் ஆஜராகி அவர் வாக்குமூலம் அளித்தார். தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் அவர் மறுப்பு தெரிவித்தார்.
இதனிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி, விசாரணை நீதிமன்றத்தில் வதேரா கடந்த பிப்ரவரியில் வதேரா மனு தாக்கல் செய்திருந்தார். முன் அனுமதியின்றி, வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளக் கூடாது; தேவைப்படும்போது, விசாரணை அதிகாரி முன் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அவருக்கு கடந்த ஏப்ரலில் முன்ஜாமீன் வழங்கியது.
மேலும், அவரது ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தின் ஊழியர் மனோஜ் அரோராவுக்கும் முன்ஜாமீன் வழங்கப்பட்டது.
இந்நிலையில், வதேரா மற்றும் மனோஜ் அரோராவுக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, தில்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவர்கள் இருவருக்கும் அளிக்கப்பட்டுள்ள முன்ஜாமீன், வழக்கு விசாரணைக்கு பாதகமாக இருப்பதாக மனுவில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இந்த மனு மீதான விசாரணை திங்கள்கிழமை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.