ஜம்மு: இந்திய எல்லையில் ஞாயிறன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்து உள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் நவ்ஷெரா பிரிவில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் ஞாயிறன்று பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு நடத்தியது. இதற்கு எதிர்வினையாக இந்திய ராணுவமும் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதன் காரணமாக எல்லை பகுதியில் தொடர்ந்து இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கி சூடு சில மணிநேரம் நீடித்தது.
பாகிஸ்தானின் இந்த துப்பாக்கிச்சூட்டில் போகர்னி என்ற கிராமத்தில், தனது வீட்டில் தூங்கி கொண்டிருந்த முகமது ஈஷாக் (18) என்ற இளைஞருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
முதல்கட்ட சிகிச்சைக்கு பின் அவர் தேறி வருகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.