சாரதா நிதிநிறுவன மோசடி: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது.
சாரதா நிதிநிறுவன மோசடி: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன்


சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு சிபிஐ இன்று (ஞாயிற்றுக்கிழமை) சம்மன் அனுப்பியுள்ளது. 

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில், கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது. மேலும், இந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற ராஜீவ் குமாருக்கு அவகாசம் வழங்கப்பட்டது. 

இதையடுத்து, மேற்கு வங்கத்தில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் உள்ளதால், தன்னை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை மேலும் நீட்டிக்கக் கோரி ராஜீவ் குமார் மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், உச்சநீதிமன்றம் இந்த மனுவை விசாரிக்க மறுப்பு தெரிவித்து நிராகரித்தது.

இந்த நிலையில், ராஜீவ் குமார் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருப்பதற்காக சிபிஐ இன்று அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டது. இதன்மூலம் நாட்டை விட்டு அவரால் வெளியேற முடியாது.

இதைத்தொடர்ந்து, கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நாளை நேரில் ஆஜராகுமாறு ராஜீவ் குமாருக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. 

பின்னணி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது.
 
இதுதொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் ராஜீவ் குமார் இல்லத்துக்கு சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். 

இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. 

அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது. 

இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இதையடுத்து, ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com