ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது:
தொடர்ச்சியாக பெய்த மழையின் காரணமாக ராம்பன் மாவட்ட எல்லைக்குள்பட்ட ஜம்மு-காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் சனிக்கிழமை அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக, 270-கி.மீ. தூரத்துக்கு வாகன போக்குவரத்து முற்றிலுமாக முடங்கியுள்ளது. மாநிலத்தின் இதர பகுதிகளுடன் காஷ்மீரை இணைக்கும் ஒரே சாலையான இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகளை முழுமையான அளவில் செய்து முடிக்க பல மணி நேரம் ஆகலாம்.
இருப்பினும், பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு மிக விரைவில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீர் செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.