ஜெட் ஏர்வேஸ் நிறுவனரும், முன்னாள் தலைவருமான நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர், மும்பையிலிருந்து சனிக்கிழமை லண்டனுக்கு செல்லவிருந்த நிலையில், இருவரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் பயணிக்கவிருந்த விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இருவரும் கீழே இறக்கப்பட்டனர்.
கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 17-ஆம் தேதி முதல் விமானச் சேவைகளை நிறுத்தியது. அந்த நிறுவனத்தின் ஊழியர்கள், நிலுவை ஊதியத்தைக் கோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா கோயல் ஆகியோர், மும்பையிலிருந்து துபை வழியாக லண்டனுக்கு சனிக்கிழமை செல்லவிருந்தனர். இதற்காக, எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானத்தில் இருவரும் ஏறி அமர்ந்திருந்தனர். ஆனால், இருவரும் வெளிநாடு செல்வதை, குடியேற்றத் துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். பின்னர், விமானத்திலிருந்து இருவரும் இறக்கப்பட்டனர். அவர்கள் வைத்திருந்த 4 பெரிய சூட்கேஸ்களும் கீழே இறக்கப்பட்டன. இச்சம்பவத்தால், எமிரேட்ஸ் ஏர்வேஸ் விமானம் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டது. எனினும், வெளிநாடு செல்வதிலிருந்து இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டது ஏன் என்பது தொடர்பாக அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.