மகாராஷ்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தரப்புக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர்.
மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் வசித்து வந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர். இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி சென்றபோது, ஓங்காரேஸ்வரர் பாலம் அருகில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் என்பவரையும், சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பாவே என்பவரையும் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர். இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
தபோல்கரை சுட்டுக் கொன்றவர்களில் ஒருவர், சஞ்சீவ் புனலேகருக்கு ஏற்கெனவே அறிமுகமானவர் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, புனலேகரும், விக்ரம் பாவேவும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும் புணே நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தப்பட உள்ளனர் என்றார் அவர்.