ஜெகன்மோகன் ரெட்டி இன்று பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தனது பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு அழைப்புவிடுத்துள்ளார்.
ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 151இல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, விஜயவாடாவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டம் சுமார் 45 நிமிடங்கள் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைவராக ஜெகன்மோகன் ரெட்டி தேர்வு செய்யப்பட்டார். வரும் 30-ஆம் தேதி விஜயவாடாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராகப் பதவியேற்க உள்ளளார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியை ஜெகன்மோகன் ரெட்டி தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார். அப்போது இருவரும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இதையடுத்து, 30-ஆம் தேதி நடைபெறும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருமாறு பிரதமர் மோடிக்கு ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்தார். தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷாவையும் சந்தித்து அவர் அழைப்பு விடுத்தார்.