ஜெய்ப்பூர்: ராமரின் வேலைகள் செய்யப்பட வேண்டும்; கண்டிப்பாக செய்யப்படும் என்று அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஞாயிறன்று அங்குள்ள பிரதாப் கௌரவ் கேந்திரா என்னும் இடத்தில் நடைபெற்ற "ஆலய ஜீவன் பிரதிஷ்டை" நிகழ்வில், ஆன்மீக குருவான மொராரி பாபு என்பவருடன் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் முதலில் பேசிய மொராரி பாபு, 'நாம் பல நூற்றாண்டுகளாக ராமனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது ராமனுக்கான வேலைகளைச் செய்ய வேண்டியது குறித்து சிந்திக்கும் ஒரு சூழல் நாட்டில் நிலவி வருகிறது என்று தெரிவித்தார்.
இதையடுத்து பேசிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது:
எனக்கு முன்னர் பேசிய குரு மொராரி பாபு அளித்த தகவலை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ராமரின் வேலைகள் செய்யப்பட வேண்டும்; கண்டிப்பாக செய்யப்படும். ராமர் நமது நெஞ்சங்களில் இருக்கிறார். நாம் அனைவரும் சுறுசுறுப்புடன் செயல்படுவதோடு, நமது நோக்கங்களை நிறைவேற்றுவதில் முன்னேறிச் செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.