நாட்டின் பிரதமராக, வரும் 30-ஆம் தேதி பதவியேற்கும் நரேந்திர மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக, அடுத்த மாதம் மாலத்தீவு செல்ல இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர், ஜூன் 7-8 தேதிகளில் மாலத்தீவு தலைநகர் மாலிக்கு வருகை தர இருப்பதாக மாலத்தீவில் உள்ள ஊடகங்களும், தூதரக வட்டாரங்களும் தெரிவிக்கின்றன.
மாலத்தீவில் அதிபராக இருந்த அப்துல்லா யாமீன் கடந்த ஆண்டு பிப்ரவரியில் அவசரநிலையைப் பிரகடனம் செய்தார். அவரது அதிரடி நடவடிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. மேலும், சிறையில் உள்ள அரசியல் தலைவர்களை விடுவித்து, நேர்மையான முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. இதனால், இந்தியா-மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்நாட்டில் கடந்த நவம்பரில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அப்துல்லா யாமீனை தோற்கடித்து, இப்ராஹிம் சோலி புதிய அதிபரானார். அவரது பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தார். மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதற்கு அண்டை நாடான சீனா முயற்சி செய்து வரும் நிலையில், மாலத்தீவுடன் இந்தியா நெருக்கமான நட்புறவைக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அரசு முறைப் பயணமாக, கடந்த மார்ச் மாதம் மாலத்தீவு சென்று, இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தார். இந்த நிலையில், மோடி தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக மாலத்தீவை தேர்ந்தெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2014-இல் மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டுப் பயணமாக, அண்டை நாடான பூடானுக்குச் சென்றிருந்தார்.