சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக "லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டது சிபிஐ

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ அமைப்பு, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கு: கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையருக்கு எதிராக "லுக் அவுட்' நோட்டீஸ் வெளியிட்டது சிபிஐ

சாரதா நிதிநிறுவன மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள கொல்கத்தா முன்னாள் காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு எதிராக சிபிஐ அமைப்பு, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
ரூ.2,500 கோடி மதிப்பில் நடைபெற்றுள்ள சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பான வழக்கில், ராஜீவ் குமாரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ விரும்புகிறது. ஆதலால், அவருக்கு எதிராக சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் நாட்டை விட்டு அவரால் வெளியேற முடியாது.
அனைத்து விமான நிலையங்கள், குடியேற்றத் துறை அதிகாரிகளுக்கு, நாட்டை விட்டு ராஜீவ் குமார் வெளியேறும்பட்சத்தில், அதை தடுக்கும்படி சிபிஐ இந்த வாரம் உஷார்படுத்தியுள்ளது. நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ராஜீவ் குமார் ஈடுபடும்பட்சத்தில், அதுகுறித்து தங்களுக்கு தெரியப்படுத்தும்படியும் சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
சிபிஐ சம்மன்: இதனிடையே, சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கு விசாரணையில் திங்கள்கிழமை நேரில் ஆஜராகும்படி ராஜீவ் குமாருக்கு சிபிஐ அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளது. அதில், கொல்கத்தாவில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பின்னணி: மேற்கு வங்கத்தில் நடைபெற்ற சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக விசாரணை நடத்த ராஜீவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. பின்னர், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. 
இதைத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட சிபிஐ, வழக்கின் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை ராஜீவ் குமார் அழித்துவிட்டதாகவும், சில முக்கிய ஆவணங்களை சிபிஐயிடம் இருந்து மறைத்துவிட்டதாகவும் குற்றம்சாட்டியது. 
இதுதொடர்பாக  ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் சென்றபோது, அவர்களை அந்த மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அத்துடன், சிபிஐயின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 3 நாள்கள் தர்னாவில் ஈடுபட்டார். இதையடுத்து, விசாரணைக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்க மறுப்பதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் சிபிஐ முறையிட்டது. 
இந்த விவகாரத்தை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு ஆஜராக ராஜீவ் குமாருக்கு உத்தரவிட்டது. அத்துடன், ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்து கடந்த பிப்ரவரி 5-ஆம் தேதி உத்தரவிட்டது.
இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக்கோரி சிபிஐ தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தொடர்பான விசாரணையின்போது, ராஜீவ் குமாருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ராஜீவ் குமாரை கைது செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை, உச்சநீதிமன்றம் கடந்த 17-ஆம் தேதி திரும்பப் பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com