மகாராஷ்டிரத்தில் சமூக ஆர்வலர் நரேந்திர தபோல்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் ஜூன் 1-ஆம் தேதி வரை சிபிஐ காவலில் விசாரிக்க புணே நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி வழங்கியது.
மகாராஷ்டிர மாநிலம், புணே நகரில் வசித்து வந்த மருத்துவர் நரேந்திர தபோல்கர்.
சமூக ஆர்வலரான இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20-ஆம் தேதி அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்ட போது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஆதாரங்களை அளிக்க உதவிய குற்றச்சாட்டின்பேரில், குற்றம்சாட்டப்பட்ட சிலருக்கு ஆதரவாக வாதாடி வந்த வழக்குரைஞர் சஞ்சீவ் புனலேகர் மற்றும் சனாதன் சன்ஸ்தா அமைப்பைச் சேர்ந்த விக்ரம் பாவே ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை கைது செய்தனர்.
கைதானவர்களை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிஐ தரப்பில் புணேயில் உள்ள கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஞாயிற்றுக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு, கைதானவர்களை ஜூன் 1-ஆம் தேதி வரை காவலில் விசாரிக்க சிபிஐக்கு அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.