உத்தரப் பிரதேச மாநிலம், வாராணசி தொகுதியில் தம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக பிரதமர் மோடி 27ஆம் தேதி (திங்கள்கிழமை) வாராணசி செல்கிறார்.
அதற்கு முன்னதாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்துகிறார்.
வாராணசியில் முக்கிய பகுதிகள், குடியிருப்புகள் முதல் குறுகலான வீதிகள் வரை ஊர்வலமாக சென்று வாராணசி மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார். பின்னர், பாஜக தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இந்நிலையில், பிரதமர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சுரேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் சுரேந்திர சிங், மாவட்ட எஸ்.பி.ஆனந்த் குல்கர்னி ஆய்வு மேற்கொண்டனர்.
துணை ராணுவம், சிறப்பு பாதுகாப்புப்படை வீரர்களின் கட்டுப்பாட்டில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மக்களவைத் தேர்தலில், வாராணசி தொகுதியில் 4.79 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றபின் முதன்முறையாக வாராணசி வருகை தருவதால் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.